பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளுக்கும், காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட எம் ஜி ஆர் நகர் 1ஆவது வார்டில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, நகராட்சி அலுவலர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடி குடிநீர் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக, அலுவலர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.