மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது 'கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவான நிலையில், அவைகளுக்காக 10 விழுக்காடு லாரிகளை இயக்க அனுமதி அளித்த நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல், வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பிரிமீயம் வசூல், காலாண்டு வரி வசூல் போன்றவை செய்யப்படலாம்' என மத்திய அரசு அறிவித்துள்ளது.
'மத்திய, மாநில அரசுகள் சுங்கக் கட்டணம் வசூல், காப்பீட்டுக் கட்டணம், காலாண்டு வரி வசூலை ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும். சர்வதேச அளவில் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்காமல் இருப்பது தினசரி விலை நிர்ணயம் என்ற கொள்கையின் முரண்பாடாக உள்ளது. உடனடியாக, அவற்றின் விலையைக் குறைக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கச்சா எண்ணெய் விலை சரிவை சாதகமாக பயன்படுத்துமா இந்தியா?