திருச்செங்கோடு நகரை அடுத்துள்ள சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி. எம்டெக், எம்எஸ் படித்துள்ள இவர் சுவீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எம்எஸ் படிக்கச் சென்றபோது, சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பகுதியைச் சேர்ந்த மரினா சூசேன் என்பவரை, கூடைப்பந்து விளையாடும் இடத்தில் சந்தித்துள்ளார். தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

பின்னர் மணமகள் வீட்டார், விருப்பப்படி கிறிஸ்தவ முறையில் திருமணமும், மணமகன் தரணி வீட்டார் விருப்பப்படி இந்து மத வழக்கப்படியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தரணி - மரினா சூசேன் ஜோடி, இந்து முறைப்படி ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி தங்கச்சங்கிலி மற்றும் மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் சுவீடன் நாட்டு முறைப்படி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.

இந்தத் திருமணத்தில் பெண் வீட்டாரின் உறவினர்கள் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டு சேலை அணிந்து வந்திருந்தனர். சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற இந்த காதல் திருமணம் சாணார்பாளையம் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.