கடந்த மே 28ஆம் தேதி நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அரசுப் பணிகளை நாமக்கல் மக்களவை உறுப்பினரான ஏ.கே.பி. சின்ராஜ் (கொங்குநாடு தேசிய கட்சி) ஆய்வுசெய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், நகராட்சி குடிநீர் இணைப்பை வீட்டிற்கு முறைகேடாகப் பயன்படுத்திவருவதாக புகார் வந்துள்ளதாகவும், அதுகுறித்து அலுவலர்களை ஆய்வுசெய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் சின்ராஜ் தங்கியிருந்த நாமக்கல் பயணியர் மாளிகைக்குச் சென்ற பாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் தனது பெயரைக் கெடுப்பதாகக் கூறி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சின்ராஜ் நாமக்கல் ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பாஸ்கர், அவரது ஆதரவாளர்கள் மயில்சுந்தரம், சேகர், செல்வகுமார் (எ) ராஜா, வகுரம்பட்டி ராஜா உள்ளிட்ட 25 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.