கோவிட்-19 வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 30 பேர் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை உறுதி செய்துள்ளது.
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊடரங்கு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பலர் இதன் தீவிரம் புரியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியே வரும் பொதுமக்களின் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியும் கலைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொதுமக்களின் நடமாட்டம் கூடுதலாக காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பரமத்திவேலூர் காவல்துறையினர் சார்பில் புதிய யுக்தி கைக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியே சுற்றும் பலரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வந்திருக்கிறோம் என சாக்கு சொல்வதால், இனி அதற்குரிய சீட்டு வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மருந்துகள் வாங்க வேண்டுமாயின் மருத்துவரின் பரிந்துரை சீட்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பொதுமக்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
மேலும் வீட்டை வெளியே வரும் அனைவரும் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும். ஏனெனில் அவர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்தவராக இருப்பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்யும் பணியில் பரமத்திவேலூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் இந்த செயல் அனைவரின் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க : அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைத்திட ஐஏஎஸ் அலுவலர்களைக் கொண்ட 9 குழுக்கள்!