நாமக்கல்: மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டுவரும் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, கட்டடத்தின் தரம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்த சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது. மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது. சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும்...
நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே என குறிப்பிட்டுள்ளார்.