நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. முதல் கட்டமாக முதலைப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பல்வேறு தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில், பள்ளி வாகனங்களில் உள்ள பிரேக் சிஸ்டம், அவசரகால வழி, பிளாட்பாரம், படிகட்டுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு சாதனங்கள், இருக்கைகள் உள்ளிட்டவை தரமாக உள்ளனவா? ஓட்டுநர் உரிமம், வாகன சான்று, வாகன காப்பீடு ஆகியவை உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின்போது 171 பள்ளி வாகனங்களில் சோதனை செய்யப்பட்டது. அவற்றில் உரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத மூன்று வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன. பின்னர் தகுதி இழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் போக்குவரத்து அலுவுலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.