நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக நீண்டகாலமாகக் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆத்திரம் அடைந்த காடம்பாடி, மாரியம்மன் கோவில் தெரு, என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நகராட்சி ஆணையர் ஏகராஜை கண்டித்து நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு காலிக் குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, நகராட்சி அலுவலகத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம் காரணமாக அலுவலகத்தின் உள்ளே இருந்து அலுவலர்கள் வெளியே செல்ல முடியாத நிலையும், பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தின் உள்ளே நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகராட்சி ஆணையர் ஏகராஜ் வெளியே வர முடியாத நிலையில், நகராட்சி பொறியாளர் வசந்தன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் அலுவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நீண்ட ஆண்டுகளாக குடிநீர் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டிவருவதாகவும் குடிநீர் எடுத்துச்செல்ல நீண்ட தூரம் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
அதனையடுத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தெரிவித்ததையடுத்து அங்கிருந்த பெண்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: குளச்சலில் பாஜகவினருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் மோதல்