நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயம் கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து புனிதப் பயணமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி, இன்று காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
இதில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை பவனியில் கைகளில் குருத்தோலைகளை 'ஏந்தி ஓசன்னா பாடுவோம்... உன்னதத்திலே தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர்' என பாடல்களைப் பாடி பவனியாக சென்றனர்.
இந்தப் பவானி பேராலயத்தின் முகப்பு பகுதியில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகளின் வழியாக பேராலயத்தில் கீழ்கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்தச் சிறப்பு பிரார்த்தனை கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.