நாகப்பட்டினம்: ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த ஜனவரி 29-ம் தேதி நள்ளிரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து விசைபடகு மற்றும் மீன் வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 29 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென அவர்கள் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மூலமாக தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். இதன் மூலம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி விடுதலை செய்தது.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 29 மீனர்வகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து, 14 நாள்கள் தனிமைப்படுத்தினர். பின்பு 29 மீனவர்களையும் விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து மீனவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு
குறிப்பாக சென்னையில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகம் வந்த 12 மீனவர்களையும் அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரமான விசைப்படகை மீட்டுத்தர வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்