நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை சீயாத்தமங்கையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. அதில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் பருத்தியினை விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் அந்த விற்பனைக் கூடத்தில் ஜூலை 5ஆம் தேதி பருத்தி ஏலம் விடப்போவதாக அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் அன்று முன் அறிவிப்பின்றி ஏலம் ரத்து செய்யப்பட்டது. அதனால் அன்று பருத்தி ஏற்றிவந்த விவசாயிகள் இரண்டு நாள்களாக வாகனங்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தனர். அதையடுத்து இன்று பருத்தி ஏலம் தொடங்கிய நிலையில் வாகனங்களிலிருந்து பருத்தியை இறக்க அலுவலர்கள் அனுமதி வழங்காமல் வாகனங்களுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "இரண்டு நாள்களாக வாடகை வாகனங்களில் பருத்தி மூட்டைகளை வைத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு வாகன வாடகை 2000 ஆயிரம் ரூபாய் வீதம் இன்று வரை 6000 ரூபாய் வழங்கியுள்ளோம். மேலும் பருத்தி கொள்முதலை தாமதப்படுத்தினால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.
இந்த நிலையில் பருத்தியை ஏலம் விடாமலும், இறக்க அனுமதி வழங்காமலும் அலுவலர்கள் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். எனவே குறிப்பிட்ட தேதியில் காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: தாமதமாகும் பருத்தி விற்பனை - வேதனையில் விவசாயிகள்