மயிலாடுதுறை: கடந்த புதன்கிழமை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டு சரி செய்யபட்டது. ஆனால் நேற்று இரவு மயிலாடுதுறையில் பல ஊர்களில் அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கிராமங்களில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்பட்டது. நல்லதுகுடி, மாப்படுகை, கழனிவாசல், கடக்கம், வடகரை, சேத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் ஐந்து முறைக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. கோடைக் காலம் என்பதால் மின் நிறுத்தத்தின் காரணமாக ஏசி அல்லது மின் விசிறி இயங்காத காரணத்தால் பொதுமக்கள் புழுக்கம் தாங்காமல் தங்கள் வீடுகளின் வெளியில் அமர்ந்து இருந்ததை காண முடிந்தது.
பள்ளி மாணவ மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதனிடையே மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து காரணம் கேட்டு மின்துறை அதிகாரியிடம் ஒருவர் வாக்குவாதம் செய்யும் ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் மின்சாரப் பற்றாக்குறையால் மின்சாரம் துண்டிக்க தங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக அந்த அதிகாரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திடீர் மின்தடை ஏன் ? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்