நாகை மாவட்டம் பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு அமைத்துள்ளது. இதன் அருகிலேயே இயற்கை எரிவாயு கொண்டுசெல்ல கெயில் நிறுவனம் குழாய் அமைத்துள்ளது.
இந்தக் குழாய் அமைக்கும் பணிகள் பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை 26 கி.மீ. தூரம் முடிவடைந்துள்ளது. இந்தக் குழாயில் உள்ள சேறு, சகதியை அகற்றும் பணி சில நாள்களாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கெயில் நிறுவன குழாய் தூய்மை பணியின்போது குழாயிலிருந்து அதிவேகத்தில் வெளியேறிய காற்றின் அழுத்தம் காரணமாக சுத்தம் செய்ய பயன்படுத்திய ரப்பர் உருளை, வால்வு ஆகியவை அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் விழுந்தது. இதனால் வயல் பகுதியில் நன்றாக விளைந்த சம்பா சாகுபடி பயிர்கள் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.