மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 40 நோயாளிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் இதற்கென்று தனியாக வார்டு அமைத்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இங்கு வழங்கக்கூடிய உணவு கடந்த சில நாள்களாக தரமற்றதாக வழங்கப்படுவதாக சிகிச்சையில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து எடுத்துவரப்படும் உணவை சாப்பிடுகின்றனர்.
அரசு உணவுக்காக தனியாக நிதி அளித்தும் தரமான உணவு வழங்காமல் தரமற்றவை வழங்கப்பட்டுவருவதாக அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நோயாளிகள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் தரமற்ற உணவு வழங்குவதாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து நோயாளிகள் தாங்கள் தங்கியுள்ள வார்டிலிருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகவலறிந்து வந்த சீர்காழி காவல் துறையினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் நோயாளிகள் வார்டின் உள்ளே சென்றனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.