நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டட வசதி இல்லாமல் திறந்த வெளியில் இருந்ததால் மழைக் காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டடத்தை நேற்று (ஆக. 10) விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.
மேலும், இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கீழப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, வானகிரி, மேலையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சி விவசாயிகள் பயன்பெறுவர்.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பெரும்பள்ளம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் மகேந்திரன், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.