நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் ஜனவரி 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நேற்று இரவு நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாகக் கலைநிகழ்ச்சியுடன் தாரை தப்படைகள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சந்தனக்கூட்டின் மீது பூக்கள் தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களை கண்டும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலமானது அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. பின்னர், நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெற்ற சந்தனம் பூசும் வைபவத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொண்டு வழிபட்டார்.
சந்தனக்கூடு நிகழ்ச்சியையொட்டி திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழாவை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் உத்தரவிட்டுள்ளார்.