நாகை மாவட்டம் அருகில் புதுச்சேரி மாநிலத்தின் கீழ் வரக்கூடிய காரைக்கால் அமைந்துள்ளது. அங்கு மதுபானத்தின் விலை குறைவு என்பதால், மதுபானக் கடத்தல் என்பது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. கடத்தல்காரர்கள் தொடர்ந்து பல்வேறு நூதன முறைகளில் மதுபானம் கடத்துவதால் இதனை முழுவதுமாக தடுப்பது சவாலாக இருந்து வருகிறது.
இந்தச்சூழ்நிலையில் இன்று காரைக்காலில் இருந்து நாகைக்கு லாரியில் சிலர் மதுபானம் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திட்டச்சேரியில் இருந்து லாரியை காவலர்கள் பின்தொடர்ந்துள்ளனர், இதனையறிந்த லாரி ஓட்டுநர் ஏனங்குடி கடைத்தெரு அருகில் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
பின்னர் லாரியை சோதனை செய்த காவலர்கள், அதிலிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6,000 லிட்டர் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களைக் கைப்பற்றி தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த மதுபாட்டில்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பயணியிடம் ரூ. 20 ஆயிரம் கொள்ளையடித்த 3 பேர் கைது!