நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த முத்து லட்சுமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்டோபர் 28ஆம் தேதி நாகை மாவட்ட மீனவர்கள் ஒன்பது பேர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி நள்ளிரவில் சென்னைக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் நாகை மீனவர்களை தாக்கி, படகுடன் இழுத்துச் சென்று சிறை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறைப் பிடித்து செல்லப்பட்ட நாகை மீனவர்களை ஆந்திர மீனவர்கள் அங்குள்ள ஒரு கடற்கரை பகுதியில் அடித்து துன்புறுத்தும் காணொலிக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதனால் நாகை மாவட்ட அக்கரைப்பேட்டை மீனவர்கள், ஆந்திரா மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டுத்தரக் கோரி நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் மனு அளித்தனர். இச்சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.