மயிலாடுதுறை: திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திலுள்ள 21 விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நேற்று (ஜூலை 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலர்களிடம் வாக்குவாதம்
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். அதன்பேரில் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவலர்கள், பழையாறு முதல் தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்களிலும் சுழற்சி முறையில் இரவு பகலாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று (ஜூலை 28) தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவர் கிராமத்திலுள்ள படகுகள், வலைகள், எஞ்சின்கள் குறித்து மீன்வளத்துறை, கடலோர அமலாக்க பிரிவினர் ஆய்வு மேற்கொள்ள முயன்றனர்.
தகவலறிந்து கடற்கரை பகுதியில் திரண்ட புதுப்பேட்டை மீனவர்கள் அலுவலர்களை சிறைபிடித்து ஆய்வு பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் தங்கள் அனுமதியின்றி தங்களது படகு, வலைகளை ஆய்வு செய்யக்கூடாது என கடும் வாக்குவாதம் செய்தனர்.
மீனவர்கள் வலியுறுத்தல்
பதற்றமான சூழல் ஏற்பட்டதால் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கபட்டனர். தகவலறிந்த மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் புதுப்பேட்டைக்கு விரைந்து வந்தனர். அவர்களும், அனுமதியின்றி ஆய்வு செய்வதால் தங்களுடைய மீன்பிடி தொழில் பாதிக்கபட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அதுவரை மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் ஆய்வு செய்யக்கூடாது எனக்கூறி உடனே அலுவலர்களை திரும்பிச்செல்ல வலியுறுத்தினர்.
ஆனால், அலுவலர்களோ வேறு கிராமத்திலும் ஆய்வு செய்யமுடியாது என்பதால் வேறு வழியின்றி புதுப்பேட்டை கிராமத்திலேயே முகாமிட்டுள்ளனர். இதனால் கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சென்னையில் 7716 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள் அகற்றம்'