நாகை மாவட்டம், வெளிப்பாளையத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது, அதனை அடுத்து இரவு முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள், வெளிப்பாளையம் சிவன் கோயிலில் இருந்து பூக்களை தட்டில் ஏந்தியபடி ஊர்வலமாக முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த மலர்களைக் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த சித்திரைத் திருவிழாவானது மே 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.