மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த தென்னம்பட்டினம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான இடம் உள்ளது. அப்பகுதியில் தனிநபர் ஒருவர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றி இருந்த 40-க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த மரங்கள் திடீரென வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த தென்னம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் புகழ், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். மரத்தை வெட்டும் ஒப்பந்த பணியைச் செய்துவந்த மருதங்குடியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் புகழ், சிலம்பரசனை தொலைபேசியில் அழைத்து விசாரணை செய்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலரை மரம் வெட்டிய ஒப்பந்ததாரர் ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஊராட்சிக்குச்சொந்தமான இடத்தில் இருந்து பழமையான மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் திருவெண்காடு காவல் நிலையத்திலும், ஊராட்சி மன்றத்தின் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் புகார் மனு அளித்துள்ளார்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மரத்தை வெட்டி விற்பனை செய்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Video Leak - நகராட்சி அலுவலக மேலாளரை தகாத வார்த்தைகளால் வசைபாடிய பெண்