2014ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.பி.சி. 328-படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்கப்படுவது குற்றமில்லையா என நீதிபதியிடம் நந்தினி கேள்வி எழுப்பினார்.
இதனால் அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலை 5ஆம் தேதி நந்தினிக்கும், குணா ஜோதிபாசு என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடக்க இருந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இருவரின் சிறை தண்டனையை கண்டித்து நந்தினியின் சகோதரியும், மதுரை சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவியுமான நிரஞ்சனா ஆனந்தன், இன்று காலை சட்டக்கல்லூரி முன்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தார்.
இதற்கு, ஆதரவு வழங்கக்கோரி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார். இதையறிந்த மதுரை காவல்துறையினர் நிரஞ்சனாவை, கைது செய்தனர்.