மதுரை: முக்கிய பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடு வரம்பிற்கு விலக்கு அளித்ததுடன், பருப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பருப்பு வகைகளை இருப்பு வைத்துக் கொள்வதற்கான கட்டுப்பாடு விதிமுறைகளையும் தளர்த்தி உத்தரவை பிறப்பித்துள்ளமைக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நம் நாட்டில் பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு பாசிப் பருப்பு தவிர ஏனைய அனைத்து பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்து ஜூலை மாதம் 2ஆம் தேதி, ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த உத்தரவு நாடு முழுவதும் பருப்பு வணிகம் செய்திடும் மற்றும் பருப்பு வகைகளை தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
பர்கூர் உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட அறிவிப்பை 19.07.2021-ம் நாள் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மொத்த வணிகர்கள் 500 டன் (ஒருவகைப் பருப்பு 200 டன்னுக்கு மேல் இல்லாது) பருப்பு வகைகளை இருப்பு வைத்து வணிகம் செய்திடவும், சில்லறை வணிகர்கள் ஒவ்வொரு பருப்பு வகையிலும் தலா 5 டன் இருப்பு வைத்து வணிகம் செய்திடவும், தயாரிப்பு நிறுவனங்கள், தொழில் நிறுவன உற்பத்தித் திறனில் 50 சதவிகிதம் அல்லது கடைசி 6 மாத இருப்பு, இதில் எது அதிகமோ அதை இருப்பாக வைத்து உற்பத்தி செய்திடலாம் எனவும், எவ்விதக் கட்டுப்பாடின்றி இறக்குமதியாளர்கள் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யலாம் எனவும் அறிவிப்பு செய்துள்ளது.
துவரை, மசூர், உளுந்து மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றிற்கு, அக்டோபர் 31 வரையிலான காலத்திற்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றும், ஏனைய குறு தானியப் பயறு வகைகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும், இறக்குமதியாளர்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் பருப்பு வகைகளின் இருப்பு விபரங்களை நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துவரை, உளுந்து, மசூர் மற்றும் கொண்டைக் கடலை ஆகியவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் முடிவினையும், பட்டாணி, பீன்ஸ், லோபியா, காபூலி உள்ளிட்ட அனைத்து சிறுதானிய பருப்பு வகைகளை எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பு வைத்துக்கொண்டு வணிகம் செய்வதற்கு அளிக்கப்பட்ட தளர்வினையும், பருப்பு வகைகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வால், கரிஃப் விதைப்புக் காலமான இந்தக்கால கட்டத்தில் விவசாயிகளுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களது விளைபொருட்களை வாங்க உத்தரவாதம் வழங்கி, இருப்பு வைத்து உற்பத்திப் பொருட்களை தங்கு தடையின்றி தயாரித்து விற்பனை செய்ய ஏற்பட்டுள்ள அனுகூலமான சூழ்நிலையையும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெற்று பயனடைவர்.
இதன்மூலம் பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும், வரவிருக்கும் விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை செயல்பாடுகளின் போது பருப்பு வகைகளின் விலை உயர்வு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு, வணிகர்கள் தேவைப்படும் அளவிற்கு இருப்பு வைத்துக்கொண்டு வணிகம் செய்வதற்கும் உறுதியாக இருக்கும் என தொழில் வணிகத் துறை நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் பெரும்பாலான சந்தைகளில் பருப்பு வகைகளின் சராசரி விற்பனை விலைகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதும், குறிப்பாக மசூர் பருப்பைத் தவிர மற்ற அனைத்து பருப்பு வகைகள் அவற்றின் குறைந்தபட்ச அடிப்படை விலைக்கு கீழேதான் விற்பனை செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.