மதுரை: தஞ்சாவூர் ஆலங்குடியைச்சேர்ந்த செல்வராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,' தஞ்சாவூர் அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலுக்குச்சொந்தமான குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்தில் நீர் தேங்காமல், கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் கோயிலுக்குச்சொந்தமான இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் தரப்பு, கோயிலுக்குச்சொந்தமான குளங்களை, வருவாய்த்துறையினர் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குளம் என வகைப்பாடு செய்துள்ளனர். இதனால் கோயிலுக்குச்சொந்தமான குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க இயலவில்லை’ எனக்கூறினர்.
இதைத்தொடர்ந்து கோயிலுக்குச்சொந்தமான குளங்களை எவ்வாறு, அரசு புறம்போக்கு என வருவாய்த்துறையினர் வகைப்படுத்துவர். எதன் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தினர். தமிழ்நாடு முழுவதும் இது போன்று கோயிலுக்குச்சொந்தமான நிலங்களை, அரசு புறம் போக்கு என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா? இது குறித்து தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை, அறநிலையத்துறை பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'சிறப்பாக பண்ணியிருக்கீங்க...' - தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி பாராட்டு