நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கரோனா ஊரடங்கில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நானும் எனது நண்பர்களும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். எனவே கூடங்குளம் காவல் துறையினர் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில், நடைபாதையில் சீட்டு விளையாடினால் தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "தமிழ்நாடு அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தது. இதன் மூலம் பல்வேறு தற்கொலைகள், குடும்பத்தின் வறுமையை போக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஆன்லைன் ரம்மி சீட்டு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகிறது. பணம் சூறையாடப்படுகிறது. இது குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களின் நேரத்தையும், அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் கெடுக்கிறது. இது சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
எனவே தமிழ்நாடு அரசு , மத்திய அரசு இது போன்ற ஆன்லைன் உள்ளிட்ட சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு