மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமியை, 2015ஆம் ஆண்டு அவரது பெண் உறவினர் ஒருவர் 11 வயதில் அழைத்துச் சென்று வளர்த்துவந்துள்ளார். பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த பெண் உறவினர், 13 வயதில் பருவம் அடைந்த சிறுமியையும், அத்தொழிலில் ஈடுபடுத்திவந்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பெண் உறவினர், அவரது தோழிகளும், பாலியல் பெண் தரகர்களுமான அனார்கலி என்ற அனாரம்மாள், சுமதி, ஐஸ் சந்திரா என்ற சோரி சந்திரா, தங்கம் ஆகியோர் சரவணபிரபு உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுக்குச் சிறுமியை, பலவந்தமாகப் பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறுமியை ஏமாற்றி, நாள்தோறும் ஒவ்வொரு நபரிடமும் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்துள்ளனர். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கியப் புள்ளிகளாகத் தேடப்பட்டுவந்த சிறுமியின் உறவினர் உள்ளிட்ட ஐந்து பெண் தரகர்களை ஆள்கடத்தல் விபசார தடுப்பு காவல் துறையினர், பல முறை பின்தொடர்ந்து கைதுசெய்ய முயன்றபோது தப்பியோடினர்.
இதையடுத்து மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, துன்புறுத்துவதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் ஆள்கடத்தல் விபசார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் நேரில் சென்று சிறுமியை மீட்டனர். அப்போது அங்கிருந்த சரவண பிரபு என்பவரை மட்டும் கைதுசெய்தனர்.
சிறுமியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்தத் தகவலின்பேரில், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உறவினர், சுமதி, ஐஸ் சந்திரா என்ற சோரி சந்திரா உள்பட ஐந்து பெண் தரகர்களைத் தேடிவந்த நிலையில், நேற்று (டிச. 23) காலை அவர்களைத் தனிப்படையினர் கைதுசெய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில், 11 வயதிலிருந்து சிறுமியை பெண் உறவினர் உள்ளிட்ட ஐந்து பேரும் 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதும், பணம் அதிகளவு பெற்றுக்கொண்டு, சிறுமிக்குப் பண ஆசை காட்டி ஏமாற்றிவந்ததும் தெரியவந்தது.
மாவட்டம் முழுவதிலும் அதிக பணத்துக்கு சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்ததும் தெரியவந்தது.
ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், பல்வேறு மாநிலத்தவர்கள், தொழிலதிபர்கள் என, பல தரப்பினரிடம் சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கைதான ஆறு பேருக்கு உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னதம்பி தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த தனிப்படை காவல் துறையினர் ஆறு பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து ஆண்டுகளாகச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால், 70 வயதான மூதாட்டி போன்று உடலில் சிறுமிக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
முக்கியப் புள்ளிகளாகத் தேடப்பட்டுவந்த தரகர்கள் தற்போது கைதான நிலையில், பலவந்தப்படுத்தி சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்தது தமிழ்நாட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி என்று பாராமல் அவருடன் வலுக்கட்டாயமாக பாலியலில் ஈடுபட்ட சுமார் 600 பேர் யார், அவர்கள் பின்னணி என்ன என்ற விவரங்களைச் சேகரிக்கும் பணியில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து கைதுசெய்யும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு