மதுரை : உக்ரைன் நாட்டில் தவித்து வரும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் குறித்து வெளியுறவு அமைச்சர் மற்றும் எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின்/ இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, பயண ஏற்பாடுகள் பற்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து பெற்றோர்களின்/ உறவினர்களின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து நானும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அமைச்சக அலுவலர்களுடனும் தொடர்பில் இருந்து வருகிறேன். பெற்றோர் உடன் அங்கிருந்து தொடர்பு கொள்கிறவர்களின் அலைபேசியில் சார்ஜ் தீர்ந்து விடுவதால், பயணத்தின் நடுவே சார்ஜ் போட முடியாமல் பேச முடியாமல் போகிறது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.
கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
தற்போது இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அரசு தரப்பு ஏற்பாடுகள் பற்றி விவரித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவெகியா எல்லைகள் வழியாக வருபவர்களுக்குத் தொடர்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளியுறவு அமைச்சகத்தின் கட்டணமில்லா தொலைபேசி/ மற்ற தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன.
மேற்கூறிய நான்கு நாடுகளின் இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ள உதவி தொலைபேசி எண்கள்/ இ மெயில்/ வாட்ஸ் அப் எண்கள் தரப்பட்டுள்ளன. இதுதவிர குறிப்பான கவலைகள், தகவல்கள் இருப்பின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தின் இ மெயில், தொலை பேசி எண்கள் தரப்பட்டுள்ளன.
பெற்றோரிடம் இருந்து வரும் தகவல்கள் உரிய மட்டத்திற்கு என்னுடைய நாடாளுமன்ற அலுவலகத்தின் மூலமாகவும் கொண்டு செல்லப்படும். இந்திய குடிமக்கள் அனைவரும் ஊறு ஏதும் இல்லாமல் பாதுகாக்கப்படவும், பயணங்கள் அமையவும் தொடர்ந்து முயற்சிகளை நானும் அமைச்சக மட்டத்தில் தொடர்புகொண்டு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : உக்ரைனிலிருந்து வீடு திரும்பிய அரியலூர் மாணவிக்கு வரவேற்பு