மதுரை: சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த கயல்விழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல தாக்கல் செய்திருந்தார். அதில், "தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள முனியசாமி மற்றும் அவரது மனைவி கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உறவினரான நான், கல்லூரியில் பிஇ படித்து வந்தேன். அப்பொழுது நான் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை காதலித்தேன். திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தோம்.
இது குறித்த தகவல் தெரிந்தவுடன் என்னுடைய உறவினர்கள் குறிப்பாக முனியசாமி தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக் கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர். இந்த நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டோம். அதிமுகவைச் சேர்ந்த முனியசாமி அவருடைய கட்சி பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு எங்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதியாளர் , சாதி மற்றும் மத ரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது என்று கூறியுள்ளளது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கடந்த 8 ஆண்டுகளாக என் மீது பாகுபாடு கொண்டு என்னை பலவகைகளில் தொந்தரவு செய்து வருகின்றனர் . எனவே, தேர்தல் ஆணைய விதிமுறையை பின்பற்றாத, சாதி பாகுபாடு பார்க்கும் அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் சார்ந்துள்ள அதிமுக கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் அமர்வில் இன்று (நவ.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, இது பொது நல வழக்கு இல்லை. தனி நபர் பாதிப்பு குறித்த வழக்கு. மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி அடுத்தவாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விடுதலை கோரி நளினி தொடந்த வழக்கு விசாரணை 3 வாரங்கள் தள்ளிவைப்பு