மதுரை எம்.கே.புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2017 - 18 சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகம், பழமையான நாகரீகம் கீழடி, போன்ற தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் விதமாக நூலகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை சார்பில் அறிவிக்கப்பட்டதன் படி தமிழ்நாட்டில் தனித்தன்மை வாயந்த நூலகம், காட்சியங்கள் அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர், "அரசு தரப்பில் 7 சிறப்பு நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் இசை, நடனம் , ஆகியவைக்கு தஞ்சாவூரிலும், நாட்டுப்புற கலை நூலகம் மதுரையிலும், தமிழ் மருத்துவ நூலகம் திருநெல்வேலியிலும், பழங்குடி கலாச்சார நூலகம் நீலகிரியிலும், கணிதம், அறிவியல் நூலகம் திருச்சியிலும், அச்சுக்கலை நூலகம் சென்னையிலும், வானியல் நூலகம் கோயம்புத்தூரிலும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடப்பதால் பழமை நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது" என வாதிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், "புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன்தரும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும் என எதிர்பார்கிறோம். தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுகள்" என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.