மதுரை மாவட்டம், திருமங்கலம் கற்பகநகர் அருகேயுள்ள ஆறுமுகம் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் (45). இவரது மனைவி விஜி (35), இவர்களுக்கு 10 வயதில் ஹரி ஸ்ரீ (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், ஹரிகிருஷ்ணன் தனது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
அதேபோல், பசும்பொன் தெருவில் வசித்து வருபவர் யோகா ஆசிரியை சித்ராதேவி (32). இவரும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த நிலையில் தனது தந்தை கண்ணையாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணனின் மகள் ஹரி ஸ்ரீ சித்ராதேவியிடம் யோகா பயின்று வந்துள்ளார். தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக ஹரிகிருஷ்ணன் சென்று வரும் சமயத்தில், சித்ராதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் காணாமல் போனார். ஏப்ரல் 5 ஆம் தேதி தனது மகள் காணாமல் போனதாக கண்ணையா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனுக்கும், தனது மகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர்கள் இருவரும் செல்போனில் பேசியதையும் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஹரிகிருஷ்ணனே தனது மகளை கொலை செய்து இருக்கலாம் என்று திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் வினோதி, மதுரை காவல் ஆணையர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் கண்ணையா புகார் மனு அளித்துள்ளார். ஆனால், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை எதுவும் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (மே. 4) காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஹரிகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஹரிகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், "நான் தான் சித்ராதேவியை கொலை செய்து கழிவறையில் வைத்து புதைத்தேன்.

எனது இறப்புக்கு யாரும் காரணம் அல்ல. கொலை செய்த குற்றத்தை என்னால் பொறுக்க முடியாமல், எனக்கு நானே தண்டைனை கொடுத்துக்கொண்டேன். சித்ராதேவியின் இருசக்கர வாகனம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தனது மகளின் உயிர் பலியாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை குற்றம்சாட்டியதுடன், தங்களுக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொன்ற வழக்கறிஞர் தற்கொலை!