நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில் நந்தினியை திருமணம் செய்யவுள்ள குணா ஜோதிபாசு இன்று ஈடிவி பாரத் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரும் இணைந்து மதுக் கடைகளை மூட வேண்டும் என்று துண்டு பிரசுரம் கொடுத்தனர். அதற்காக காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது நந்தினி, அவரது தந்தை ஆனந்த ஆகியோரை காவல் துறையினரை தாக்கியதாக கூறி வழக்கு பதியப்பட்டது.
அதற்கான வழக்கு நேற்று நீதிமன்றம் வந்தபோது, காவல் துறையினர் சார்பாக ஆஜரான காவலர்கள் இருவரும் காவல் துறையினரை அடித்தது உண்மை என பொய் சாட்சி கூறினர். அதற்கு எதிராக தனக்கு தானே வாதாடிய நந்தினி அந்த காவலரிடம் அப்படி என்றால் டாஸ்மாக்கில் விற்கும் மது பாட்டில்கள் உணவு பொருளா, போதை பொருளா இல்லை, மருந்து பொருளா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீதிபதி உடனடியாக இந்த கேள்வி எல்லாம் இங்கே கேட்க கூடாது என்று தெரிவித்தார். ஆனால் இந்த கேள்விக்கு மீண்டும் பதில் கேட்டதால் நீதிபதி, நந்தினி மீது நீதிமன்ற அவதூறு வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிமன்றம் வந்தது. இந்திய சட்டப்பிரிவு 320 பற்றி நீதிமன்றத்தில் பேசுவதை தவிர்த்தால் நாங்கள் விடுவிக்கின்றோம் என நீதிபதி தெரிவித்தார். அதற்கு நந்தினி மறுத்து விடவே நீதிபதி பிணை வழங்கவில்லை. எனவே, நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தை பிணையில் விடுவிக்காததற்கு உள்நோக்கம் உள்ளது" என்றார்.