மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதற்காகப் பொதுமக்களிடம் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அந்த வகையில் மதுரையில் 100 வார்டுகளில் ரத யாத்திரை வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதி கோரி உதவி காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தோம். அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால் அந்த உத்தரவை காவல் துறையினர் நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "நீதிமன்றம் உடனடியாக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தற்போதுவரை காவல் துறையினர் நிறைவேற்றவில்லை. ரத யாத்திரை வாகனத்தையும் காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்" என வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து ரத யாத்திரை வாகனத்தை உடனடியாக விடுவிக்கவும், மார்ச் 1ஆம் தேதி மதுரை காவல் ஆணையர் நேரில் முன்னிலையாகி இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!