மதுரை: பள்ளிக்கு அருகே கஞ்சா விற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டால் அந்த வழக்கு போதைத் தடுப்பு சிறப்புப் புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, 20 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டாலே, அந்த வழக்கு சிறப்புப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது 50 கிலோ என அதிகரித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், "போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்குப் போதுமான அளவு காவல் துறையினரை நியமிக்க வேண்டும். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் காவலர்கள் பலர் பொறியியல் பட்டதாரிகளாக உள்ளனர்.
அவர்களை இதுபோன்ற சிறப்புப் பிரிவுகளுக்குப் பணியமர்த்துகையில், நவீன தொழில்நுட்பம் குறித்து அறிந்திருப்பதால் விரைவாகக் குற்றவாளிகளைப் பிடிக்க ஏதுவாக இருக்கும். போதைப்பொருள்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் பெரும்பாலும் குறையும்.
அது அரசுக்கு நல்லது. ஆகவே போதைப்பொருள் தடுப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் குறைந்தபட்சம் தலா 100 காவலர்களைக் கூடுதலாக வழங்க வேண்டும்.
இரண்டு பிரிவுகளிலும் ஆண்டுக்கு 100 வழக்குகளே பதிவுசெய்யப்படுகின்றன. இன்றைய சூழலில் ஊழலின் ஆழம் அதிகம் இருக்கும் நிலையில், லஞ்சம் வாங்க யாருக்கும் அச்சம் இருப்பதில்லை.
வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அலுவலர்களுக்கு அச்சம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் லஞ்சம் பெறுவது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும். அத்தோடு போதைப்பொருள் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியவை.
போதைத் தடுப்புப் பிரிவு காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் 50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல்செய்யப்படும் வழக்குகளே போதைத் தடுப்புச் சிறப்புப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்படும் என்பது இதன் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும்" என நீதிபதி தெரிவித்தார்.
மீண்டும் அரசுத் தரப்பில், "போதைப் பொருள் விற்பனை, பயன்பாட்டைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் போதைப்பொருள் தடுப்பு மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன" என்றார்.
அதற்கு நீதிபதி, "போதைத் தடுப்பு, லஞ்ச ஒழிப்புப் பிரிவுகளில் காவல் துறையினருக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு முன்வர வேண்டும். போதைப்பொருள்களால் ஏராளமான மாணவர்களின் வாழ்வும், அவர்களின் எதிர்காலமும் சீரழிக்கப்படுகிறது.
போதைப்பொருள் தடுப்பு குறித்து அதிக அக்கறை செலுத்தும் அதே வேளையில், நிரபராதிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் நீதிமன்றம் கவனம் செலுத்துகிறது. ஆகவே அனைத்து காவல் நிலையங்களிலும் எவ்வளவு கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது, அது எங்கு வைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை வழக்கு எண்ணுடன் செப்டம்பர் 13ஆம் தேதிக்குள் தாக்கல்செய்ய வேண்டும்" என அரசுத் தரப்பிற்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நெகமம் சேலைகள் உள்ளிட்ட பாரம்பரிய சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை!