மதுரை: அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், 'தை 1ஆம் தேதி, முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த வருடம் ஜனவரி 15-ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
அவனியாபுரம், அம்பேத்கர் நகர் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். 2022ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடைபெற்றது. ஆனால், 2023-ம் வருடம் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல், ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவினர் மட்டும் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, 2022ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது போன்று, நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்துக் குழு அமைத்து நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் இன்று (12.01.2023) தீர்ப்பளித்த நீதிபதிகள், அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தவும், இதில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனை கமிட்டி உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் எனக் கூறினர்.
சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குநரை இணைத்து மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிட்டனர். மேலும் மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டு கமிட்டி அமையப்பெற்று, ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலைமை ஏற்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உத்தரவிட்டனர்.