மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் கோயிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அப்போது ஏற்படும் நெரிசலால் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகின்றனர்.
மூவர் ஜீவ சமாதி அருகே கோயிலுக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலம் (சர்வே எண்- 180) உள்ளது. அந்த இடத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இடுகாட்டுக்கு வேறு இடம் ஒதுக்கவும், கோயில் இடத்தை பக்தர்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்துவதற்குப் பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று (நவ.26) நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
- கோயில் நிலத்தில் சடலங்களைப் புதைக்க அனுமதிக்க முடியாது.
- கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- கோவில் இடத்தை மீட்பது தொடர்பாகக் கோயில் நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியருக்கு ஏற்கெனவே, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் வருவாய் அதிகாரிகள் கோயில் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- வருவாய் அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் - தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு