மதுரை மாவட்டம் பந்தடி 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. அவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இவர்களது ஹாஷினி என்ற இரண்டு வயது குழந்தை உள்பட மூன்று பேரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தெற்குவாசல் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான முதல்கட்ட விசாரணையில், கரோனா ஊரடங்கினால் வேலையின்றி இருந்த விஜயகுமார் பல்வேறு இடங்களில் கடன் பெற்று குடும்பம் நடத்தியதாகவும், கடன் கொடுத்தவர்கள் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜயகுமார்- வாணி தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.