மதுரை மாவட்டம் கோ.புதூர் பகுதியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று (அக்.21) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், "தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த 10 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்று கிடந்தன.
அவற்றைத் தரம் உயர்த்துவதற்காக தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இங்குப் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
தமிழ்நாடு முழுவதும் தற்போது மொத்தம் 25 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒவ்வொரு நிலையத்திலும் தலா ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 60 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடங்களிலேயே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
எனவே, கட்டடங்கள் அனைத்தையும் புனரமைக்கவும், தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் விரிவான திட்டம் தயாரித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளோம். வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தும் சட்டத்திற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும்.
அதை நிறுவனங்கள் சரியாக பின்பற்றுவார்கள் என நம்புகிறோம். பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பள்ளிக்கல்விக்குப் பிறகு மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பான விழிப்புணர்வைக் கடந்த ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறை முறையாகச் செயல்படுத்தவில்லை.
இந்த ஆட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறித்து விரிவான அறிக்கை தயாரித்துப் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.