மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபழஞ்சி கிராமத்தில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஆயிரம் படுக்கைகளுடன் நவீன வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை நல மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வினய் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை கூட்டாக இரு அமைச்சருகளும் சந்தித்தனர். இதில் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், “நோய் தொற்றிலிருந்து தமிழ்நாடு மக்களை காப்பாற்றுவதற்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சிகிச்சைக்குப் பின் முழு குணம் அடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில், வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் நலனை முன்னிட்டு ஐந்து நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ள, இந்த அடுக்கு மாடி வளாகத்தில் 800 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன.
நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. காய்ச்சல் கண்டறியும் முகாம் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 7500 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.
மேலும், கரோனா தடுப்புப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி வருகை தர இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “இந்த நோய்க்கு மருந்து கிடையாது. அதனால் தனித்திருப்பதும் விழித்திருப்பதும்தான் மருந்து. வைரஸ் தொற்று வந்தாலும் பயப்படக்கூடாது இந்த நோயைப் பொறுத்தவரையில் எந்த வித அச்சமும் தேவையில்லை.
கரோனா வந்துவிட்டது என்றால் நாம் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். யோகா செய்தாலே போதுமானது. இந்த நோயை விரட்டிவிடலாம்” என்றார்.
இதையும் படிங்க...சிறுமியை வன்புணர்வு செய்து கொலைசெய்த வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு!