திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவநாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " கொலை மிரட்டல் வழக்கில் எனது மகன் முத்து மனோ களக்காடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின் அவரை அங்கிருந்து திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.
ஏப்ரல் 22ஆம் தேதி என்மகன் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியும் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்" எனவும் அம்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்மாறும் உத்தரவிட்டது. மேலும் இறந்த முத்து மனோவின் உடலை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மீரா கதிரவன், மனுதாரரின் கோரிக்கைகளில் 6 கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இறந்து 48 நாட்கள் ஆன நிலையிலும் முத்து மனோவின் உடல் வாங்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் பல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றப்படவில்லை.
தற்போது கரோனா காலத்தில் 48 நாட்களாக உடலை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே மனுதாரர் முதலில் நீதிமன்ற உத்தரவின்படி உடலை பெற்று கொள்ள வேண்டும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றிய பின்னர் இந்த வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.