மதுரை: உலகப் பிரசித்திப் பெற்ற இடமும் இந்தியாவின், தென் மூலையில் அமைந்துள்ள கடைக்கோடி நகரமும், புனித தலமுமான ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை, செட்டிநாடு பகுதியில் ஒரு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அதில், “சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒரு சுற்றுலாத் தலமாகும். இங்கு குலசேகர பாண்டிய மன்னன் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், செட்டிநாடு அரண்மனை, உலகப் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப மையமான சிக்ரி போன்றவை அமைந்துள்ளன.
இங்கு ஏராளமான சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கைத்தறி பொருள்கள், உணவுப் பொருள்கள் உலகெங்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
ஏற்கனவே, மூன்றாம் உலகப் போருக்கு முன்பாக இப்பகுதியில் உள்ள செட்டிநாடு பகுதியில் ஒரு விமான நிலையம் இருந்துள்ளது.
இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் விமான ஓடுதளமும் அதற்குரிய வசதிகளும் உள்ளன.
இவற்றை மேம்படுத்தி ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் 13 இடங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஏற்கனவே இப்பகுதியில் விமான நிலையம் இருந்த செட்டிநாடு பகுதியில் ஒரு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், "காரைக்குடி ஒரு புகழ்பெற்ற தலமாக இருக்கிறது. அருகே ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கடைக்கோடி நகரமாகவும் சிவலிங்க தலமாகவும் உள்ளது.
இங்கு ஏராளமானோர் வந்துசெல்கின்றனர்" என்றனர். எனவே ராமநாதபுரம் பகுதியில் ஒரு விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.