மதுரை: திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், " 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கரோனா நோய் தொற்றின் 3ஆவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கூறுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை.
சில பெற்றோர் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் சரியாக கற்கவில்லை எனக் கருதி நேரடி வகுப்பிற்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதால் சமூக இடைவேளை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு இன்று (அக்.22) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்," 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தற்போது மகிழ்ச்சியாக பள்ளி சென்று வருகின்றனர். எவ்வித பிரச்னையும் இல்லாமல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவிக்கப்பட்டது.
சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், "மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். ஆகவே பள்ளிகள் திறக்க தடை விதிக்கக் கூடாது" என வாதிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் விரும்பினால் அரசிடம் புதிதாக மனு அளிக்கலாம் எனக்கூறி வழக்கை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அக்.27இல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!