சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் "தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான விதிகளின் படி 60 கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாக 2 சுங்க கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்படக்கூடாது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடி பகுதியில் சுங்க கட்டண வசூல் மையம் அமைந்திருக்கும் நிலையில் 60 கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாக சிவகங்கை மாவட்டத்தில் செண்பகப்பேட்டை பகுதியில் சுங்க கட்டண வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தேசிய நெடுஞ்சாலைகள் விதிகளுக்கு எதிரானது. ஆகவே செண்பகப்பேட்டை பகுதியில் உள்ள சுங்க கட்டண வசூல் மையத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி கூறியதாவது, "விதிகளை மீறி 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள இரண்டு சுங்க கட்டண வசூல் மையங்கள் அமைந்திருக்கும் நிலையில், தூரங்களை கருத்தில் கொண்டு அவற்றின் சுங்க கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்.
60 நாள்களுக்குள்ளாக இதனை செய்ய தவறினால் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பாலக்குடி சுங்க கட்டணம் வசூல் மையம் சட்டவிரோதமானதாகக் கருதப்படும்" என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை மாநகரம் முழுவதும் 13,212 மருத்துவ முகாம்கள்!