இன்று காலை 4.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்து சூளகிரி அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென்று பேருந்தின் முன்புற சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் சிக்கிய பயணிகள் பேருந்திலிருந்து அவசரமாக இறங்கி சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த புதிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பயணிகள் சாலையைக் கடப்பதைப் பார்த்து பேருந்தை திடீர் பிரேக் போட்டு உடனடியாக நிறுத்தினார். இதனால் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி புதிய அரசுப் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதனால், கண நேரத்தில் அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்தன. இதில், சாலையைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சூளகிரி காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஆம்புலன்ஸை அழைத்து விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சூளகிரி காவல் துறையினர் இந்தக் கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.