சசிகலா பெங்களூருவில் இருந்து இன்று (பிப்.08) காலை புறப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட துணை கண்காணிப்பாளர் செயல்முறை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டிய சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த செயல்முறை நடவடிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது உள்ள கோவிட் 19, சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு 30(2) காவல் சட்டம் அமுலில் உள்ளதால், கீழ்கண்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்ற இந்தச் செயல்முறை ஆணையின்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
1. வி.கே சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
2. அமமுக கட்சியினரின் இதர வாகனங்கள் பின்தொடர்ந்து வர அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும்.
3. சசிகலா உள்பட யாரும் அஇஅதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவது விதி மீறல்கள் ஆகும்.
4. ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள கூட்டத்தில் 10 சதவீத அளவு சீருடை அணிந்த அமமுக தொண்டர்கள் நிறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்திட வேண்டும்.
5. பட்டாசு வெடிப்பதற்கும் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை. கொடி தோரணங்கள் பேனர்கள் மற்றும் பிளெக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கக்கூடாது.
6. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.