கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை தாலுக்கா சந்தனப்பள்ளி ஊராட்சி சின்ன பூதகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சென்னப்பா (55). இவர் அப்பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராக இருந்துள்ளார். இவர் மேய்ச்சலுக்காக ஆடுகளை அப்பகுதியில் விட்டிருந்தார்.
அதில் ஒரு ஆடு காணாமல் போனதால் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (ஜூன் 2) இரவு 8 மணியளவில் ஆட்டை தேடி சென்னப்பா சென்றார். அப்போது, அவ்வழியே சுற்றித்திரிந்த ஒற்றை யானை, சென்னப்பாவை துப்பிக்கையால் தூக்கி வீசி மிதித்துக் கொன்றது. இந்நிலையில், ஆட்டை தேடிச் சென்ற சென்னப்பா யானை தாக்கி இறந்து கிடப்பதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த தேன்கனிகோட்டை வனத்துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், யானை தாக்கி உயிரிழந்த சென்னப்பாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு