கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி (60) என்பவர், நேற்று முன்தினம் (நவ.21) இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். கோயில் பூசாரியான இவரை வடக்குத்தெருவில் உள்ள மல்லான் கைதட்டு கோயில் வழியாக சுடுகாட்டிற்கு கொண்டுச் சென்றனர்.
அப்போது, அவ்வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சடலத்தை எங்கள் பகுதியின் வழியாக கொண்டுச் செல்ல கூடாது என காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக நாங்கள் இறந்தவர்களை இந்த பாதையில் தான் எடுத்துச் செல்கிறோம், தற்போது திடீரென மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், இறந்த துரைசாமியின் சடலத்தை நடு வீதியில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காவல் துறையிடம் பேசிய பொதுமக்கள், வழக்கமாக இந்தப் பாதையைதான் பயன்படுத்தி வருகிறோம். மாற்றுப் பாதையில் செல்ல மாட்டோம் என்றனர். ஏழு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு பொறுமையை இழந்த பெண்கள், தாங்களே சடலத்தை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றனர்.
ஐதீக கட்டுப்பாடுகளால் ஆண் சடலத்தை பெண்களே சுமந்து செல்லும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சுடுகாட்டு பாதை கோரி சடலத்துடன் போராட்டம்!