கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே எஸ்டி மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் ஜோஸ் (34). பிரபல கொள்ளையரான இவர் மீது கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை, களியக்காவிளை, பளுகல் மார்த்தாண்டம், கருங்கல், தக்கலை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நகை கடைகள், வீடுகளில் புகுந்து கொள்ளையடித்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கொல்லங்கோடு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான காவல் துறையினர் எட்வின் ஜோஸை கைது செய்தனர். அப்போது, காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு 26 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் அழகியமண்டபத்தில் ஒரு தனியார் நகை அடகு கடையில் 17 சவரன் திருட்டு நகையை காவல் துறையினர் மீட்கச் சென்றனர். அப்போது, சம்பந்தப்பட்ட நகை அடகு கடை உரிமையாளர் நகையை கொல்லங்கோடு காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைப்பதாக கூறினார்.
அதேவேளையில், எட்வின் ஜோசை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். ஆனால், நகை அடகு கடை உரிமையாளர் கூறியது போல் 17 சவரன் நகையை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையினர் நகை கடை உரிமையாளரை தேடிச் சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து, தலைமறைவான நகை அடகு கடை உரிமையாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாநகரில் 10 இருசக்கர வாகனங்கள் அடித்து உடைப்பு!