கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 10 நாள்கள் அவர்களை காவலில் எடுத்து தனிப்படை காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி, மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இக்கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் 10 நாள்கள் விசாரணை நடத்திய பின்னர், மீண்டும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் கடந்த 31ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பிப்ரவரி 14ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீதிமன்றக்காவல் நேற்று முடிவடைந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதுகாப்பு, மற்றும் நிர்வாக காரணங்கள் கருதி இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் தவுபீக்கும், ஷமீமும் ஆஜர்படுத்தப்படவில்லை. அதே நேரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்த இருவரிடமும் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம், நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருவருக்கும் மேலும் 30 நாள்கள் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாட்டின் அட்சய பாத்திரம் அம்மா உணவகம்