காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு முளகுமூடு பகுதியில் சென்றபோது சிறுவர்கள் சிலர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு காரைவிட்டு இறங்கிய ராகுல் காந்தி அங்கிருந்த ஒரு சிறுவனிடம் பேசினார்.
அப்போது அந்தச் சிறுவன் தனது பெயர் ஆண்டனி ஃபெலிக்ஸ் எனவும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு ரன்னிங்கில் அதிக ஆர்வம் உள்ளதாகவும், பயிற்சியாளர்கள் இருந்தால் தன்னால் வெற்றிபெற முடியும் எனவும் ராகுல் காந்தியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சிறுவனுக்குப் பயிற்சியாளர் ஏற்பாடு செய்து தருவதுடன் ரன்னிங் ஷூ வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் நேற்று சிறுவனின் வீட்டிற்கு ஒரு கொரியர் நிறுவனத்திலிருந்து பார்சல் வந்திருந்தது. அதில் ராகுல் காந்தி உறுதியளித்தபடி சிறுவனுக்கு ரன்னிங் ஷூ வாங்கி அனுப்பியுள்ளார். அதைத் திறந்துபார்த்த சிறுவனுக்கு உள்ளே ரன்னிங் ஷூ இருந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நேற்று இரவு ராகுல்காந்தி தொலைபேசி மூலம் சிறுவனிடம் பேசியுள்ளார். அப்போது உனக்கு ஷூ பிடித்து இருக்கிறதா? கால் அளவிற்குச் சரியாக உள்ளதா? என்று விசாரித்துள்ளார்.
இதையும் படிங்க: அமமுகவுடன் கைக்கோக்கிறதா தேமுதிக?