கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர், சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி, பணம் பறித்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். அவரை குமரி காவல் துறையினர் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசி மீது ஏற்கெனவே இரண்டு பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காசியின் தந்தை தங்கபாண்டியன், தன் மகன் மீது பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் காசியை காவலில் எடுத்த காவல் துறையினர், அவரை நேசமணி நகர் காவல் நிலையத்தில் வைத்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில், காவல் துறையினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வரும் காசியின், லேப்டாப்பில் ஏராளமான பெண்களின் விதவிதமான படங்கள் இருந்தன.
சில படங்களில் பெண்களுடன் காசி நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இருந்தன. இவற்றை காணொலி காலில் இருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறை, காசிக்கு சென்னை மட்டுமின்றி கோவை, பெங்களூரு, நாகர்கோவிலைச் சேர்ந்த பல பெண்களுடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் காசிக்குப் பல நண்பர்கள் உதவி செய்ததாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தனக்கு இரண்டு நண்பர்கள் மட்டுமே உதவி செய்ததாக, அவர் காவல் துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த இருவரையும் தேடும் பணியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க...பல ஆண்டுகளாக அக்கறையில்லாமல் இருக்கும் அரசு... சொந்த செலவில் சாலை அமைத்த கிராமம்...!